உலகின் தொன்மையான தமிழ் மொழியிலே என்னால் பேச முடியலேயே – அமித் ஷா
“புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்” என காரைக்காலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காரைக்கால் வரிச்சிக்குடியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
திருநள்ளாறு சனீஸ்வரர் மற்றும் பத்ரகாளி அம்மனை வணங்கி உரையைத்தொடங்குவதாக குறிப்பிட்ட அமித் ஷா, “உலகின் தொன்மையான தமிழ் மொழியிலே, மிகவும் இனிமையான தமிழ் மொழியிலே என்னால் உரையாற்ற முடியவில்லையே என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, எதிரிகளின் இடத்திற்கே சென்று இந்தியா பதிலடி கொடுத்ததை நினைவுகூர்ந்த அவர், ‘ஆப்பரேஷன் சித்தூர்’ போன்ற துல்லியமான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டிற்குப் பெருமையை மட்டும் தேடித்தரவில்லை, தேசத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார் என அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு தனக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, முதலாவதாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் சமர்ப்பிக்க வந்துள்ளதாகவும், இரண்டாவதாக ‘இந்தியா’ கூட்டணியின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் என்.டி.ஏ (NDA) அரசு புதுச்சேரியில் ஊழலை ஒழித்து, நிலையான சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்துள்ளதாகவும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி புதுச்சேரி அரசைத் தனது அடிமையாக வைத்திருந்த நிலையில், தற்போது அதன் கௌரவம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.






