--- --:--:-- --

சேலத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் திடீர் ஆலோசனை… சசிகலாவை சந்திக்க திட்டம்?

EPS OPS 01

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரும் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தரப்பில் ஒரு கூட்டணி; இதுதவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியன தனித்தனி அணிகளாக களமிறங்கி உள்ளன.

 

தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகின்றன. இதனால், கடந்த சில நாட்களாக அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை மாற்றியமைத்து, களமிறங்கி இருக்கிறது.

 

ஒரு பக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னொரு பக்கம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

இந்நிலையில், சேலத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளனர். சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டதாகவும், கருத்துக்கணிப்புகள், தேர்தல் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

அதேநேரம், அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்கு டிடிவி தினகரனின் அமமுகவால் பாதிப்பு ஏற்படால் என்பதால், சசிகலாவை சந்தித்து ஆதரவு கோர, இரு தலைவர்களும் திட்டமிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் என்ன பேசினார்கள், சசிகலாவை சந்திப்பது குறித்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Right Menu Icon