வீடுகளில் முடங்கிய மக்கள்! விளம்பரம் செய்து மக்களை கவரும் ஆன்லைன் நிறுவனங்கள்!
கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஆன்லைன் மூலம் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் உகான் நகரில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் இணைய வழியாக பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வரும் நெட்ப்லிக்ஸ், ஹாட்ஸ்டார், எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட நிறுவனங்கள் மக்களை கவர விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

மால்கள், திரையரங்குகள் என்ற கவலையை விட்டு மிகவும் பாதுகாப்புடன் உங்கள் வீட்டில் இருந்தே பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு மகிழலாம் என்கின்றனர் இந்த நிறுவனங்கள். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசு அலுவலக பணியாளர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு பதிலாக பதிவேட்டில் கையெழுத்திடும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.
அலுவலகத்திற்கு உள்ளே வரும் போதே சானிடைசரை கொண்டு கை கழுவும் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பணி புரிந்தவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.






