தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக சித்த மருத்துவ கொரோனா மையங்களை ஏற்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்..!
தமிழகத்தில் மட்டும் கொரோனா மரணம் 3000ஐ நெருங்கப்போகிறது. ஆரம்பத்திலேயே சித்த மருத்துவத்தை ஆதரிக்கக் கோரி குரல் கொடுக்காததால்… இன்று மரணங்கள் 3000 ஐ நெருங்கிவிட்டது. இதில் இளம் வயதினர், அதிகாரிகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என கொத்துக்கொத்தாய் மரணங்களை இன்னும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சித்த மருத்துவத்தில் ஆரம்பித்திலேயே குணப்படுத்திவிடுவதை அறிந்தும், பல தனியார் மருத்துவமனைகளில் பங்குதாரராக இருக்கும் அரசியல்வாதிகளால் “தமிழகமெங்கும் சித்த மருத்துவ கொரோனா மையங்களை” ஆரம்பிக்காமல்,வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுகிறார்கள். ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுத்து ரூ5லட்சம் முதல் ரூ10லட்சம் வரை வசூல் செய்கிறார்கள்.
சென்னையில் மட்டும் இருந்த சித்தா கொரோனா மையம் நாம் தொடர்ந்து குரல் கொடுத்ததாலும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைச் செய்ததாலும் தற்போது திருவண்ணாமலை, தேனி, சேலம், திருப்பத்தூர், தென்காசி, திருச்சி, கோவை என சில மாவட்டங்களில் மட்டும் சித்த மருத்துவ கொரோனா மையங்களை ஆரம்பித்துள்ளனர். இதர எந்த மாவட்டத்திலும் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் இல்லை. எந்த சித்த மருத்துவருக்கும் கொரோனாவிற்கு வைத்தியம் பார்க்கவோ சித்த மருந்து கொடுக்கவோ அனுமதியும் இல்லை. அலோபதி மருத்துவத்தின் இடையே எட்டரை ஆண்டுகள் வரை எம்.டி படித்த சித்த மருத்துவர்களை கபசுரக் குடிநீர் மட்டும் வழங்கச் சொல்கிறது இந்த அரசு.

ஆங்கில மருத்துவத்தில் இப்போது ஒரு ஊசி 45000க்கு போட்டு காப்பாற்றும் வேலையெல்லாம் நடக்கிறது. அப்படியெனில் பணக்காரர்கள் மட்டும் பிழைக்கலாம். நாம் கைவிடப்படுகிறோம். நமக்கு சித்த மருத்துவம் மூலம் முழுமையாக எந்தச் செலவும் இல்லாமல் குணமடைய வழியிருந்தும் அரசு அதனைச் செய்ய மறுக்கிறது.
எனவே தமிழ்ப்பேரரசு கட்சி, தமிழக மக்கள் மன்றம், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி, அகரத் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு சமூகநல இயக்கத்தினர் 24/7/2020 இன்று வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் உடனடியாக காலம் தாழ்த்தாமல் சித்த மருத்துவ கொரோனா மையங்களை உருவாக்கக் கோரியும், அரசு சித்த மருத்துவப்பிரிவில் உடனடியாக சித்த மருத்துவர்களை பணி நியமனம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தோம்.
கலந்துகொண்டவர்கள்: காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் தலைமையில் தமிழ்ப் பேரரசு கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் அண்ணாத்துரை, காரல் மார்க்ஸ், நசீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்தும் மனு அளித்தனர்.







