ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று..அச்சத்தில் அமெரிக்கா!
உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரொனா வைரஸால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 143 பேர் பலியானதை தொடர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை பதுக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அதிபர் டிராம் முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்க குடிமக்களின் துன்பத்தை பயன்படுத்தி யாரும் ஆதாயம் அடைவதே தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அந்தப் பகுதிகளுக்கு முக்கிய மருந்துகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







