61 வயது தன்னார்வலருக்கு கொரோனா தொற்று! தொடர்பில் இருந்த காவலர்கள் கண்காணிப்பு!
கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உணவு வினியோகம் செய்த தன்னார்வலர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். துடியலூரைச் சேர்ந்த 61 வயது முதியவர் கடந்த 21ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கொரொனா அறிகுறி இல்லாத போதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் நோய் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. ஆனாலும் அவர் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 6-ஆம் தேதி இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் கொரொனா நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து அவர் துடியலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உணவு வழங்கும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் கொரொனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதியவர் வசித்த துடியலூர் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உணவு வழங்கிய 39 காவலர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.







