அதிமுக- திமுகவினர் இடையே பயங்கர மோதல்… 10 பேர் காயம்; பரபரப்பு!
திமுக – அதிமுகவினர் இடையே நள்ளிரவில் நடந்த மோதல், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனவர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், திமுக சார்பில் செந்தில்பாலாஜியும் களமிறங்கியுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தி வரும் கரூரில் திமுக – அதிமுகவினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் மேற்கு நகர திமுக துணைச் செயலாளர் கார்த்திகேயன் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த அதிமுக தெற்கு நகர செயலாளர் ஏகாம்பரம் மற்றும் சிலருக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது முற்றி கைகலப்பானது. இரு தரப்பினருக்கும் அடிதடியில் இறங்கினர்.
இந்த மோதலில், கார்த்திகேயனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. பின்னர், கார்த்திகேயனை, ஏகாம்பரம் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்து, வீட்டின் மீது தாக்கியதாக திமுகவினர் கூறியுள்ளனர். இதன் மோதலில், கார்த்திகேயன், கேசவன், உதயமூர்த்தி, சாந்தகுமார், சின்னப்பன் ஆகிய 5 பேர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பாதிக்கப்பட்ட கார்திகேயனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதற்கு மத்தியில், திமுகவினர் தாக்கியதாக கூறி அதிமுக தரப்பில் 5க்கும் மேற்பட்டோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிமுக – திமுகவினர் இடையே இரவில் ஏற்பட்ட மோதல், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





