சென்னையில் கொரொனா தடுப்பு குறித்து மத்திய சுகாதாரக்குழு நடத்திய ஆய்வு..!
கொரோனா தடுப்பு குறித்த பணிகளை ஆய்வு செய்ய சென்னைக்கு வந்துள்ள மத்திய சுகாதார குழுவினர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை மேற்கொண்டனர். மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகூஜா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழு பெங்களூரை தொடர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளது.
இந்தக் குழு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தியது. தமிழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை விபரங்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு விளக்கப்பட்டன.
பின்னர் மத்திய குழுவினருடன், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். கேவி பார்க் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கிண்டி கிங் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தது. மாலை 4.30 மணிக்கு தமிழகத்தில் அதிகமாக தொற்று காணப்படும் 10 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சுகாதாரத்துறையினரனுடன் காணொளி வாயிலாக மத்திய மருத்துவ குழு ஆலோசனை நடத்துகிறது.






