கொரொனாவுக்கு கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்! புதைக்க இடமில்லாமல் பிரேசில் திணறல்!
கொரோனா வைரஸ் பரவலின் மையமாக மாறி இருக்கும் பிரேசில் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒன்று மருத்துவமனை, மற்றொன்று கல்லறைத் தோட்டம். கொரோனா வைரஸ் இந்த இரண்டு இடங்களையும் மனிதர்களாலும், சடலங்களாலும் நிறைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதத்தில் நியூயார்க் நகரின் மருத்துவமனைகளும், கல்லறைகளும் இறுதி சடங்குகளை செய்யும் மையங்களும் இடமில்லாமல் திணறினர். இப்போது கொரோனா வைரஸ் தென்னமெரிக்க நாடான பிரேசிலை பற்றிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்த நாட்டில் தான் அதிக பாதிப்பும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனைகள் நிறைந்து விட்டதால் சிகிச்சைக்கு வழியில்லாமலும் கல்லறைத் தோட்டங்கள் நிறைந்து விட்டதால் உடலை புதைக்க இடம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள். சா-பாலோ, ரியோடி ஜெனிரோ என எந்த முக்கிய நகரமும் இதற்கு விதிவிலக்கல்ல.
நாளொன்றுக்கு சுமார் முப்பதாயிரம் பேர் இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். பழைய கல்லறைகளைத் தோண்டி மொத்தமாக புதைப்பதற்காக இடங்களை தயார் செய்யும் அளவுக்கு கொரோனா இழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கலாம்.
அவர்களுக்குப் கொரொனாவுக்கு பின்னால் அரசியல் ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்துபோவதை தடுக்க அற்புதங்கள் செய்ய முடியுமா என்று கேட்கிறார் பிரேசில் நாட்டு அதிபர். தாம் ஒன்றும் கல்லறை தோண்டும் ஆள் அல்ல என்றும் கேலி செய்கிறார். அதிகம் பேர் மரணமடைகிறார்களே என கேட்டால் அதற்கு என்ன என்று அலட்சியமாக கேட்கிறார்.
உலக சுகாதார அமைப்பு, மருத்துவ விஞ்ஞானிகள் என்று யாருடைய அறிவுரையும் போல்சனாரோ கேட்பதில்லை. தனது நாட்டின் சுகாதாரத் துறை, மாநில அரசுகளுக்கும் விதித்த தடைகளைக் கூட பொருட்படுத்தாமல் பொதுக் கூட்டங்களை நடத்தினார்.
கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களுக்கும் செல்கிறார்கள். பின்னர் மருத்துவமனைகளிலும், கல்லறைகளிலும் காத்திருக்கிறார்கள்.






