பலலட்சம் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு இடையே வைகையில் பச்சை பட்டுடுத்தி வந்து இறங்கிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறப்பு மிக்க சித்திரை திருவிழா இந்தாண்டு . திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காலையில் தேரோட்டமும் நடந்தது. இதற்கிடையே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வந்த கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்நதல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மூன்றுமாவடியை அடைந்தார்.
அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர். எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ் ரோடு, அவுட்போஸ்ட் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளினார்.

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டு, காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.
இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றுப்பகுதியில் இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அங்கு திரண்டனர். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.





