இன்று முடியும் அக்னி நட்சத்திரம்! தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை!
கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளத்தூர், நங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பகல் முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை முதல் பலத்த மழை பெய்தது. அப்போது இடையில் ஒரு மணிநேரம் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் சிரமத்தை எதிர் கொண்டனர்.
இதைப்போல் தர்மபுரி மாவட்டத்தின் பாலக்காடு, கும்மிடி பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.







