நடிகர் அஜீத்குமார் தாக்கப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் பரபர!
மக்களவை தேர்தல் நாளில் வாக்குப்பதிவு செய்ய வந்த போது, நடிகர் அஜீத் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்களை ஆவேசப்பட செய்துள்ளது.
திரைத்துறையில் உச்சத்தில் இருந்தாலும், நடிகர் அஜித் அதிகம் பேசாதவர்; பொதுமேடைகள் ஏறாதவர். எனினும் பல்வேறு விஷயங்களில் நல்ல முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். தேர்தல் தோறும் தவறாமல் வந்து வாக்களித்துவிட்டு செல்வார்.
அதேபோல் கடந்த 18ஆம் தேதி, தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றார். அஜீத் வந்து இறங்கியதும் அவரை காண பலரும் கூடியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் பணி பாதிக்கும் என்பதால், அஜீத்தும் ஷாலினியும் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கூறி, நேரடியாக வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். வாக்களித்துவிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வர நடிகர் அஜித் படாதபாடுபட்டார். போலீசார் தான் அவரை பாதுகாப்புடன் சூழந்து, அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் அஜீத் வாக்களித்தது குறித்த ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், அஜித் தலையில் யாரோ ஒருவர் அடிப்பது போலவும், ஷாலினி நேரடியாக சென்று வாக்களித்ததற்கு, வரிசையில் நின்ற இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போல் உள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அஜீத் ரசிகர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஓட்டு பூத்தில் செம கட்டு என்ற பெயரில், விஜய் ரசிகர்கள் #ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




