சிசு இறந்தது அறியாமல் மூன்று நாட்கள் வயிற்றில் சுமந்த கர்ப்பிணி..!
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவுற்ற பெண் தனது எட்டரை மாத சிசு இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் வயிற்றிலேயே சுமந்த அவலம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசக்கி என்பவருக்கு ஏற்கனவே நான்கு முறை கருக்கலைப்பு நடந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கருவுற்றார். கடந்த 22ம் தேதி தனியார் ஸ்கேன் மையத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் குழந்தை நலமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 25ஆம் தேதி நடைபெற்ற கருவுற்ற பெண்கள் முகாமில் இசக்கியை பரிசோதித்த அரசு மருத்துவர் கிரிஜா ஸ்கேன் அறிக்கையை முறையாக பார்க்கவில்லை என கூறப்படுகிறது. அன்றைய தினமே இசக்கியின் உடல்நலம் பாதிப்படைந்ததால் மீண்டும் பரிசோதனைக்கு சென்ற பொழுது குழந்தை இறந்து மூன்று நாட்கள் ஆனது தெரிய வந்தது.
இசக்கியின் தந்தை ராமகிருஷ்ணன் பணியில் அலட்சியமாக இருந்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். கருவுற்ற பெண்ணின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் குழந்தையை அகற்றப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமை மருத்துவர் மாரியப்பனிடம் கேட்ட பொழுது குழந்தையின் வளர்ச்சி 36 வாரங்கள் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் ஸ்கேனில் குழந்தையின் வளர்ச்சி 38 வாரங்கள் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.





