தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு இன்று தமிழகம் வருகை..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் தமிழக தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அந்த தொகுதி பாஜக வேட்பாளர் முருகன் மற்றும் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை விமானநிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் பிரதமர் 12 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி தாராபுரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. தாராபுரம் பரப்புரையை முடித்துக்கொண்டு புதுச்சேரிக்கு செல்லும் பிரதமர் மாலை 4.30 மணி அளவில் அங்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வர உள்ளார்.






