அமமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 8, 9ல் நேர்காணல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று, அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சசிகலா அறிவித்தார்; அதிமுகவுக்கு எதிராக செயல்படும் டிடிவி தினகரனின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்து, அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், தேர்தலில் அமமுக போட்டியிடுமா அல்லது ஒதுங்கி நிற்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் வரும் தேர்தலில் அமமுக போட்டியிடும்; எங்களது நோக்கம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். எனவே, அமமுகவின் அரசியல் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்கின்றன.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோருபவர்களுக்கு விருப்பமனு, இம்மாதம் 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மனுக்களை கட்சி தலைமையிடம் திரும்ப ஒப்படைக்க இம்மாதம் 7 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) கடைசி நாளாகும். நேற்றுமாலை நிலவரப்பட்டி, அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 1,700 பேர் விருப்ப மனுக்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று, அக்கட்சி அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது.





