ஆன்லைன் சூதாட்டத்தின் விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்ய கோரிக்கை..!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அதுதொடர்பாக விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப் படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்ட முடியாத சூழல் ஏற்படும்போது இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்துவருபவர்களை கைது செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதோடு அது தொடர்பான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி ,நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்எம். சுந்தரேஷ் , ஹேமலதா அடங்கிய அமர்வு மனு தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.







