கொரொனாவை பரப்பும் வகையில் செயல்பட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நகராட்சி ஊழியர் 3 பேர் நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நோய் தொற்றை பரப்பும் வகையில் இவர்கள் செயற்பட்டதாக கூறி மூவர் மீது வழக்கு பதிவு செய்ய பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி நகராட்சியில் நகராட்சி ஆணையாளர், உதவி பொறியாளர்கள் உட்பட 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் குடிநீர் வழங்கல் துறையை சேர்ந்த மேலும் மூவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சாலையில் நடந்து சென்றே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் வராததால் தான் மருத்துவமனைக்கு நடந்து சென்றதாக தெரிவித்த நிலையில் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றை பரப்பும் வகையில் மூன்று பேர் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.







