விபத்தில் சிக்கிய நபரை மருத்துவமனையில் சேர்க்காமல் வீடியோ எடுத்த அவலம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பைத்தந்தூர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த சின்னதுரை கொத்தனாராக வேலை செய்து வந்தார். மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அவர் சைக்கிளில் சென்றபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிராக்டர் மோதியது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னதுரை உயிருக்கு போராடினார். அப்போது அருகில் இருந்த சிலர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னதுரை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி ராணி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






