--- --:--:-- --

ஸ்வீட் கடை வேலைக்காக பல லட்சம் பெற்று மோசடி! பிரபல ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!!

WhatsApp Image 2019-05-17 at 8.01.18 AM

கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

 

கோவையில், பிரபல நெல்லை முத்து விலாஸ் மிட்டாய்க் கடை செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக இருப்பவர் பாலசந்திரன். இவர் தங்களது கிளை நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, நேர்காணலுக்குச் சென்றுள்ளனர்.

 

அவ்வாறு நேர்காணலுக்கு சென்றவர்களிடம், வேலைக்கு அமர்த்துவதுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா, ரூ. 30 ஆயிரம் என, ரூ. 35 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு பாலச்சந்திரனுக்கு நெருக்கடி தந்தனர். ஆனால், பாலச்சந்திரனோ, பணம் கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆவேசமடைந்த, பாதிக்கப்பட்ட மக்கள், கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

புகாரின் பேரில், கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நெல்லை முத்துவிலாஸ் மிட்டாய்கடை உரிமையாளர் பாலசந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon