தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 96 பேருக்கு பாதிப்பு உறுதியானது..! இன்று உயிரிழப்பு ஏதுமில்லை..! பீலா ராஜேஷ் தகவல்!!
தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை நேற்று வரை 738 ஆகவும் உயிரிழப்பு 8 ஆகவும் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 84 பேர் ஒரே இடத்திற்கு சென்று வந்தவர்கள் என்றும், மற்ற 12 பேரில் ஒருவர் தனியார் மருத்துவமனை மருத்துவர் என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், இதுவரை 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
அதிவிரைவு கொரோனா சோதனை கருவிகள் இன்று இரவு தமிழகம் வர உள்ளதாக தெரிவித்த பீலா ராஜேஷ், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 59918 பேரிடம் நாளை முதல் இந்த கருவி மூலம் சோதனை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






