யூதரையும், இஸ்லாமியரையும் ஒன்றாக இணைத்துள்ள கொரோனா…!
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில் யூதரையும், இஸ்லாமியர்களையும் கொரொனா வைரஸ் ஒருங்கிணைத்து உள்ளது. கொரொனா வைரஸால் எண்ணற்ற நாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மறுபுறம் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது.
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தற்போது பிற உயிரினங்கள் உலகில் இந்த பூமி தங்களுக்கும் சொந்தம் என்பதை நிரூபித்து வருகின்றன. இயற்கை தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் மதரீதியான பாகுபாடுகளும் மறைந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணமான காட்சிகள் ஜெருசேலம் நகரில் நடந்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆபிரகாம், ஜோகர் அபுவும் அவரவர் மத வழக்கப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு யூதரான மேல் ஜெருசலேமை பார்த்தபடியும், இஸ்லாமியரான அபு மெக்காவை பார்த்தபடியும் பிரார்த்தனை செய்தனர்.
மருத்துவ பணியாளர்களாக வாரத்திற்கு மூன்று முறை இருவரும் ஒன்றாக பணியாற்றுவதால் இருவரின் கூட்டு பிரார்த்தனையும் புதிதல்ல என்றாலும், கொரொனா வைரஸ் பரவி வரும் இந்த தருணத்தில் ஒருங்கிணைந்த இந்த பிரார்த்தனை மதங்களைக் கடந்த மனிதாபிமானத்தை பலரது நெஞ்சங்களிலும் உணர வைத்துள்ளது.






