டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்யம்.? ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றி..! கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்!!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் மீண்டும் அரியாசனம் ஏறுவார் எனவும் கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் 8-ந்தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கஆம் ஆத்மி கட்சி முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இங்குள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜகவும் இம்முறை ஆட்சியை வசமாக்க தீவிரம் காட்டுகிறது. அதே வேளையில் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி நடத்திய காங்கிரசும் களத்தில் இறங்கியுள்ளது. 3 கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு, மூன்று கட்சிகளுமே ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என தனியார் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 70 இடங்களில் 54 முதல் 60 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் எனவும் பாஜகவுக்கு 10 முதல் 14 தொகுதிகளை கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றாலே அதிகம் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.





