அதெல்லாம் சும்மா வெறும் வதந்தி; நம்பாதீங்க! அமைச்சர் உதயகுமார் எதை சொல்கிறார் தெரியுமா?
சென்னையில் காற்றுமாசு உள்ளதாக, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார்.
டெல்லியை தொடர்ந்து சென்னை நகரில் காற்று மாசு அடைந்து வருவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த இலையில் சென்னை காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை எழிலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 28 இடங்களில் காற்று மாசு அளவிடும் நிலையங்கள் உள்ளன. காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 8 இடங்களில் காற்றின் தரத்தை அறியப்படுகிறது.
சென்னை நகரில் காற்றுமாசு என்று பரப்பப்படுகிறது என்று சிலர் கதை, வசனங்களை கேட்டு பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம். காற்றுமாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்பவேண்டாம். ஒருசில இடங்களில் காற்று மாசு நிலவியதற்கு ‘புல் புல்’ புயலின் தாக்கம் காரணம் தான் என்று கூறினார்.





