த.வெ.க அலுவலகத்தில் தள்ளுமுள்ளு: நீடிக்கும் பதற்றம்
சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் தங்களை இக்கட்சியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி காலை 11 மணியளவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அலுவலக நுழைவாயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்வதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர், பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கியமான நிர்வாகிகளை மட்டும் அடையாளம் கண்டு, கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கத் தொடங்கினர்.
இதனால் அதிருப்தியடைந்த மற்ற நிர்வாகிகள், நாங்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையத்தான் வந்திருக்கிறோம், எங்களையும் உடனே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறி முண்டியடிக்கத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த காவல்துறையினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.





