புதிய கட்சியைத் தொடங்கினார் கேசிஆர் மகள் கவிதா..!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அம்மாநில மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பின் கட்சியில் இருந்து விலகிய கவிதா, புதிய கட்சியை தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை கவிதா அறிவித்தார். அதன்படி, தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா எனக் கட்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவ் ‘பாரத ராஷ்ட்ரிய சமிதி’ கட்சியை ஆரம்பிக்கும் போது முதலில் கட்சியின் பெயர் ‘தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி’ சுருக்கமாக ‘டிஆர்எஸ்’ (TRS) என பெயரிடப்பட்டது. பின்பு கட்சியை விரிவுபடுத்துவதாக கூறி தேசிய அரசியலுக்கா ‘பாரத ராஷ்ட்ரிய சமிதி’ சுருக்கமாக ‘பிஆர்எஸ்’ என மாற்றப்பட்டது. இப்போது அதே ‘டிஆர்எஸ்’ பெயர் வரும் வகையில் தனது கட்சியின் பெயரை ராஷ்ட்ரிய சேனா கட்சி என வைத்திருக்கிறார் கவிதா.
கவிதா தனது கட்சியின் பெயரை அறிவித்த சிறிது நேரத்திலேயே, பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்வினையாற்றியது. கவிதாவின் கட்சிப் பெயரை ‘ஜெராக்ஸ்’ என கிண்டல் செய்ததோடு பிரபலமான பிராண்டுகளைப் போன்று விற்கப்படும் போலிப் பொருட்களின் புகைப்படங்களை பகிர்ந்து “அசல் எப்போதும் அசல்தான்!” என்று பதிவிட்டுள்ளது.
ஆனால் இந்த கிண்டலை மறுத்த கவிதா, பி.ஆர்.எஸ் கட்சி தனது ‘ஆன்மாவை’ இழந்துவிட்டதாகவும், அது பெயரளவுக்கு மட்டுமே இயங்குவதாகவும் விமர்சித்தவர், தெலங்கானாவின் அடையாளத்தையும் ஆன்மாவையும் காப்பாற்றுவதற்காகவே ‘டி.ஆர்.எஸ்’ என்ற பெயரில் மீண்டும் மக்கள் முன் வருவதாகவும் விளக்கம் கொடுத்தார். மேலும், 2029 சட்டமன்றத் தேர்தலில் தனது தெலங்கானா ராஷ்ட்ரிய சேனா கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கவிதா தெரிவித்துள்ளார்.





