நாளை முதல் 31-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை..!
சிவகங்கை மாவட்டம் முழுவதும், மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வருகிற 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 224 வது நினைவு தினம் அரசு சார்பிலும், 27 ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பிலும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும் அனுசரிக்கப்படும் நிலையில் அங்கும் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அந்த சமுதாய மக்கள் அஞ்சலி செலுத்த செல்வர். அதன் காரணமாக இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.





