கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி..!
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடத் தமிழக அரசு சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் நினைவிடத்தையும் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள். சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 26ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட்டாலும் இன்னும் அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.





