ரூ.20,000 கடனுக்காக அரங்கேறிய கொடூரம்..!
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாதக் கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம், அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட்டில் கடந்த 6 மாதங்களாக அங்கேயே வியாபாரி போட்டுக் கொடுத்த தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி, மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களின் திருமணமான மகள் காவியா – மருமகன் முத்து குடும்பமும் இவர்களோடு வேலை செய்து வந்தது.
வேலைக்கு முன் தொகையாக விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ஆனந்தன் தம்பதியினர் ரூ. 20,000 கடன் வாங்கியுள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், “வாங்கிய கடனைக் கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது” எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், வேறு வழியின்றி ஆனந்தன் வயிற்று வலியில் துடித்த தனது மனைவிக்கு விளக்கெண்ணெய் தடவிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவ உதவி கிடைக்காமல் தன்னந்தனியே தங்கியிருந்த தேன்மொழிக்கு, தார்ப்பாய் கூடாரத்திலேயே பிரசவம் ஆகத் தொடங்கியது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் தங்கியிருந்த இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இது இயற்கை மரணம் என்று கூறி, படிப்பறிவில்லாத ஆனந்தனிடம் வெறும் ரூ.2,000 பணத்தைக் கொடுத்து, உடலை சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
செய்தி அறிந்த மக்கள் மன்றம் உதவிக்குச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக தேன்மொழியின் உறவினர்கள் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மனுவைப் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கணவர் ஆனந்தனிடமும், மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகத்திடமும் பொன்னேரிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





