மனித மாண்புகளுக்கு எதிரானதாகும் – திருமாவளவன் விமர்சனம்
மிசா விவகாரம் குறித்து பேசியபோது, முதல்வர் வெளிப்படுத்திய உடல்மொழி, மனித மாண்புகளுக்கு எதிரானதாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். எனவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தெரிவித்துள்ளார்.
முன்னதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, மிசா விவகாரம் குறித்து பேசியபோது, முதலமைச்சர் விஜய் செய்த செய்கை விமர்சனத்துக்குள்ளானது. பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள்.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது என்றும் அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் விஜய், தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை எனக் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்றும் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் தவெகவின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான விசிகவும் முதல்வரின் செயல்பாட்டை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-“காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும். முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




