அஞ்சுகோட்டையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு அருகாமையில் அமைந்துள்ள அஞ்சுகோட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பெற்ற ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலின் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் நிரப்பப்பட்ட கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
மங்கள வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் ராமா, ராமா என பக்தி கோஷங்களை எழுப்ப, சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நிறைவேற்றினர்.

புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்ட கலசங்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது, ஆலயமே திவ்ய ஒளியில் மிளிர்ந்தது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவரான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தனம், குங்குமம், பூக்கள் மற்றும் வண்ணமயமான ஆடைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையின் போது கற்பூரம், சாம்பிராணி, மற்றும் அகில் ஆகியவற்றின் மணம் ஆலயம் முழுவதும் நிறைந்திருந்தது.
திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக செய்திருந்தனர்.





