டென்னிஸ் வீராங்கனை கொலையில் தந்தையின் செயல்..!
தந்தையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை, குட்டை பாவாடை அணியக் கூடாது என்றும், ஆண் நண்பர்களுடன் பேசக்கூடாது என்றும் அவரது தந்தை மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்ததாக அவரது தோழி ஹிமாண்ஷிக்கா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ராதிகா யாதவ், மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றது மட்டுமல்லாது டென்னிஸ் பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில் தனது மகளின் வருமானத்தில் வாழ்ந்து வருவதாக நண்பர்களும் உறவினர்களும் கேலி பேசியதாக கூறி அவரது தந்தை தீபக் யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ராதிகாவின் தோழி ஹிமாண்ஷிக்கா சில அதிர்ச்சி தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில், ராதிகா அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தை கண்காணித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
டென்னிஸ் பயிற்சி மையத்தை நடத்தி வந்த ராதிகா சொந்தக் காலில் நிற்பதை விரும்பாத அவரது தந்தை, ராதிகா நடத்தையில் சந்தேகப்பட்டதாகவும், வீடியோ காலில் பேசும் போது கூட எதிரில் பேசுபவரின் முகத்தை காட்டச் சொல்லியதாகவும் ஹிமாண்ஷிக்கா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே போலீசார் விசாரணையின்போது ராதிகாவை சுட்டுக்கொலை செய்த அவரது தந்தை, கதறி அழுததாகவும் மகளைக் கொன்றதற்காக தன்னை தூக்கிலிடச் சொன்னதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




