என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதைப் போன்ற காவிக்கொடியும் இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 10 ஆவது கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், இந்த ஆண்டு கலந்துகொண்டார். இந்நிலையில், மத்திய அரசு தர வேண்டிய நிதியை விடுவிக்க இக்கூட்டத்தின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையில், “மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டுமென நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.முன்னதாக, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் உடன் கையைப் பிடித்து சிரித்துப் பேசினார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுதொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். அதில், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும், செங்கல்பட்டு – திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.முன்னதாக, வெள்ளைக்கொடியுடன் டெல்லி சென்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதைப் போன்ற காவிக்கொடியும் இல்லை” என்று கூறினார்.