எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

த்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. கந்தராஜன், “இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம், கேரளம், தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4000 லாரிகளை துறைமுகத்திலிருந்து எரிவாயு பட்டிலிங் பினாண்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்துவரும் பணியை மேற்கொண்டுவருகின்றன.

 

இந்நிலையில், 30ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில், மாற்று ஓட்டுநர் இல்லாதபட்சத்தில் ரூ. 20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

 

அதனால், தென் மண்டல அளவில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். தென் மண்டலம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன.

 

வருவாய் இழப்பைக் காட்டிலும், வேலை வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.