--- --:--:-- --

லேடரல் என்ட்ரி நடைமுறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

1

த்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு வாரியமான UPSC கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

 

இந்த பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ். போன்ற அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நேரடி நியமனம் மூலம் தேர்வு நடைபெற உள்ளதாக வெளியான அறிவிப்பு பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நேரடி நியமனங்கள் நடைபெற்று வந்துள்ளன. லேடரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது ஒரேகட்டமாக 45 அதிகாரிகள் துணை மற்றும் இணை செயலாளர்கள் பொறுப்பில் தேர்வு செய்ய இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நடைமுறை, பட்டியலினத்தவர்களின் கனவுகளை சிதைத்துவிடும் என கூறியுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்டோபர் 2- ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

 

லேட்டரல் என்டரி முறைக்கு எதிர்ப்பு மிகவும் வலுவடைந்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் யுபிஎஸ்சி அமைப்பிற்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்கட்சிகள் வரவேற்று உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon