மு.க.அழகரி உட்பட 17 பேர் விடுவிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து ஒளிப்பதிவாளர் உடன் சென்று பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தரப்பட்டது.
இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் அப்போதைய துணை மேயராக இருந்த மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சாட்சிய விசாரணை, அரசுத் தரப்பு வாதங்கள், எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இதையடுத்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மு.க.அழகிரி உள்பட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அனைவரையும் விடுவித்து நீதிபதி முத்து லெட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




