கால தாமதமாக சிகிச்சை அளித்ததால் கணவர் உயிரிழப்பு எனப்புகார்..!
அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தன் கணவர் உயிரிழந்துவிட்டதாக 9 மாத கர்ப்பிணிப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை தூசி பகுதியை சேர்ந்த அம்மு என்ற பெண் புவியரசன் என்பவரை ஜாதி கலப்பு திருமணம் செய்து கடந்த 10 மாதங்களாக காஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார்.
தவறிவிழுந்த கணவர் புவியரசனுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு காலதாமதம் செய்து சிகிச்சை அளித்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க தான் பலமுறை முயன்றதாகவும், நிறைமாத கர்ப்பிணியான தனக்கு அரசு உதவ வேண்டும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






