16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..! பெற்றோர் மற்றும் மணமகன் கைது..!
மதுரை சோழவந்தான் அருகே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மணமகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றதாக குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது.
உடனடியாக மணமகன் வீட்டிற்கு சென்று குழந்தைகள் நல அமைப்புகள் விசாரணை செய்தது. விசாரணையில் 16 வயது சிறுமியை மணம் செய்து சடையாண்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை ராமசாமி ஆகியோரை கைது செய்தனர். குழந்தை திருமண சட்டத்தில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மணமகன் சடையாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருமண வயதை எட்டிய பிறகு பெற்றோர் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






