10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களை 11-ம் வகுப்பில் சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சேர்க்க வேண்டும்…ஆசிரியர் கூட்டமைப்பு யோசனை!!
10-ம் வகுப்பில் தேர்ச்சியடையும் மாணவர்கள், பதினோராம் வகுப்பில் சேருவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதியும், அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்றும் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதாமலேயே ஏற்கனவே பள்ளியில் நடந்த காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மற்றும் வருகைப் பதிவேட்டை கணக்கில் கொண்டும் மதிப்பெண்களை தொகுத்து மதிப்பீடு செய்யப்பட உள்ளது .

இதனால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் பதினோராம் வகுப்பு சேர்வதற்கான படிவத்தை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்க வேண்டும். ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருப்பிடத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் சேர்க்கை படிவத்தை அனுப்பிவைக்க வேண்டும்.
ஒரு வேளை புலப்பெயர்ந்த தொழிலாளர்களின் குழைந்தைகளை சேர்ப்பதற்கு அவர்கள் பணிப்புரியும் சான்று மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களின் சான்றை சமர்பிக்க வேண்டும் .மாணவர்களின் சேர்க்கை என்பது அவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஏழு கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். அப்படி மாணவர்களின் சேர்க்கையை உறுதிப்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் அதிகரிக்கும்.
அதேபோன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடையும் மாணவர்கள் மேற்படிப்பு செல்வதற்கும் அதாவது அறிவியல் கலை கல்லூரிகளுக்கு சேர்வதற்கும் இதே போன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சா.அருணன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






