தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமரை குற்றம் சாட்டியுள்ள மன்மோகன் சிங்!
தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர் அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை விரிவாக வழங்கியுள்ளார்.
தாய் நாட்டை காப்பதற்காக தங்களது இன்னுயிரை கொடுத்த 20 இந்திய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகிவிடக் கூடாது என்று தெரிவித்திருக்கும் மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள் வருங்கால சந்ததியினர் நம்மை அரசு எப்படி பாதுகாக்கும் என்பதற்கான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எல்லையில் அத்துமீறிய சீனாவின் பெயரைக்கூட குறிப்பிடாத பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குறித்து மறைமுகமாக விமர்சித்திருக்கும் மன்மோகன் சிங் பிரதமர் தனது வார்த்தைகளில் நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் பிராந்திய நலன்கள் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளை சட்டவிரோதமாக உரிமை கொண்டாடி வருகிறது என்றும் சீனாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் அது நமது கடமை எனவும் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் சீனா குறித்த பேச்சுக்களை சாடியிருக்கும் மன்மோகன்சிங் உண்மையை மறைப்பது என்பது ராஜதந்திரம் கிடையாது என்றும் தீர்க்கமான தலைமைக்கு அது மாற்று கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை இறையாண்மையை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த 20 வீரர்களுக்கான நீதியினை அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் மன்மோகன்சிங் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.






