வாயில் காயத்துடன் சோர்வாக நடமாடிய 12 வயது யானை எப்படி உயிரிழந்தது?
கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி அருகே வாயில் காயத்துடன் இருந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே ஜம்மு கண்டி என்ற இடத்தில் சனிக்கிழமையன்று வனத்தை ஒட்டிய பகுதியில் காட்டு யானை ஒன்று நடமாடியது. சோர்வுடன் நின்றிருந்த 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை கண்ட வனத்துறையினர் மருத்துவருடன் அதை நெருங்கி பரிசோதித்தனர்.
அப்போது அதன் வாயில் காயம் இருந்தது தெரியவந்தது. காயத்திற்கான மருந்துகள் வைக்கப்பட்ட பலாப் பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றை யானைக்கு அவர்கள் ஊட்டினர். அதன் பின்னர் ஓரளவு புத்துணர்ச்சி பெற்ற யானை சனிக்கிழமை இரவு காட்டுக்குள் சென்றது.
ஆனால் ஞாயிறன்று காலை மீண்டும் ஜம்முகண்டிக்கு வந்த யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் நிற்க முடியாமல் படுத்து கொண்டது. அதன் உடல் நிலை மோசமாகி விட்ட நிலையில் யானையின் உயிரை காக்க மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. திங்கள் அன்று அதிகாலை அந்த யானை உயிரிழந்தது.
உடற்கூறு ஆய்வில் யானையின் வாயில் மேல் தாடைப் பகுதியில் தந்தம் குத்தப்பட்டது போன்ற காயம் இருந்தது. மற்றொரு யானையுடன் சண்டை இட்ட போது தந்தம் குத்தி காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.






