டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.. கலவரத்தை ஒடுக்க முடியலையா..? அப்ப ராஜினாமா செய்யுங்க..! ரஜினி பரபர பேட்டி!!
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வி தான் காரணம் என்றும், வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வன்முறை தலைவிரித்தாடுகிறது. கல்வீச்சில் தொடங்கிய வன்முறை தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு என கலவர பூமியாக மாறியுள்ளது டெல்லி .இந்த வன்முறையால் 23 பேர் பலியாகியுள்ளனர். 20 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வீடுகள், குடிசைகள், கடைகள், வாகனங்கள் என தீக்கிரையானவற்றின் எண்ணிக்கை ஏராளமாகி டெல்லி பற்றி எரிகிறது. இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.

இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் குரல் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி கூறியதாவது:
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத் துறையின் தோல்வியே காரணம். அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது இது போன்ற வன்முறை ஏற்படாமல் தடுக்க போதிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
சில கட்சிகள் மதரீதியாக கலவரத்தை தூண்டுகின்றன. இது சரியான போக்கு அல்ல. இது போன்ற வன்முறைகளை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற சூழலில் ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

டெல்லி கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். கலவரத்தை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும். வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.மத்திய அரசு இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கும் என கருதுகிறேன்.
என்னை பாஜக ஊதுகுழல் என சில மூத்த பத்திரிக்கையாளர்கள் விமர்சிக்கின்றனர். உண்மை எதுவோ அதைத்தான் நான் பேசுகிறேன். என்னை பாஜகவோடு அடையாளப் படுத்த வேண்டாம். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. இந்த சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் முதல் குரல் என்னுடையதாக இருக்கும் என ரஜினி கூறினார்.
நான் பாஜகவின் ஊதுகுழல் இல்லை; என்னை பாஜகவுடன் இணைத்து அடையான் படுத்தவும் வேண்டாம் என்று கூறியதுடன், டெல்லி வன்முறைக்கு காரணம் என மத்திய அரசை கடுமையாகவும் ரஜினி சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




