மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறிய தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது விவாதம் நடத்த மாநிலங்களவையில் 6 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு பாரதிய ஜனதாவுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் அதிமுக பிஜு ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்கும் என தெரிகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது. அதன்படி 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுறுமை வழங்கும் மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கலானது.
மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக 80 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் நாளை மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் ஆகிறது.