ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி‌பி‌ஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

 

சிபிஐ வழக்கில் ப சிதம்பரம் ஜாமீன் பெற்றிருக்கும் நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை கடந்த 16ம் தேதி நிராகரித்துள்ளது.

 

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில்சிவில், அபிஷேக் ஆகியோர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிதம்பரம் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.

 

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா தங்கள் தரப்பு விளக்கத்தை வருகிற 25-ஆம் தேதி தாக்கல் செய்வதாக கூறினார். அதை ஏற்று வழக்கு 26 ஆம் தேதிக்கு நீதிபதி பானுமதி ஒத்திவைத்தார்.


Leave a Reply