சென்னை, நாகை, திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இரவில் மழை பெய்துள்ளது; இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ராயப்பேட்டை, அண்ணாநகர், கிண்டி, அசோக்நகர், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் இரவில் மிதமான மழை பெய்து, இரவில் குளிரச் செய்தது. அதேபோல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில், இன்று காலை கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, நாகூர், கீழ்வேளூர், கருவேலங்கடை, திருப்பூண்டி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது.
இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில், 13 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.