மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதி கட்டணம், உணவுக் கட்டணம் உள்ளிட்டவைகள் அண்மையில் உயர்த்தப்பட்டன.
புதிதாக சேவை கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டு ஆயிரத்து 700 ரூபாய் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுதிக்கான வைப்புத் தொகையும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை கட்டுப்பாட்டை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 நாட்களுக்கும் மேலாக மாணவர்களின் தொடர் போராட்டம் நீடித்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்தில் விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.