ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெப்சீரிஸ்களுக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் மூன்று இயக்குனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் திரைப்படத்தை இயக்குனர் ஏஎல் விஜய்யும், ஜெயா என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்தூரியும் இயக்கி வருகின்றனர். இதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் என்ற இணையதளத்துடனும் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தன் அனுமதி இல்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என உத்தரவிடக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தவற்றின் விவரங்கள் தனக்கு தெரியும் என்பதாலும், கதையில் தங்களது குடும்ப விஷயங்களை பாதிக்கும் வகையில் காட்சி சித்தரிக்க படலாம் என்றும் தீபா அச்சம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டு இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால் அந்த திரைப்படங்களுக்கு தடை விதிக்கவும் ஜெ.தீபா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம் இயக்குனர்கள் என்று ஏஎல் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கௌதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.