வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதலால் கலவரம்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாரணியம் ராமகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவர் கார் மோதி விட்டதாக தெரிகிறது.

 

இதில் காயமடைந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பாண்டியனின் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது இராமகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த 10 பேரை பாண்டியனின் கார் மற்றும் காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பல் பாண்டியனின் காருக்கும் தீ வைத்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அவர்கள் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாததால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காவல்நிலையத்தில் மூன்று காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.

 

கலவரத்தில் காயமடைந்த பாபு ராஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு அம்பேத்கர் சிலையை உடைந்ததால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவியது. வேதாரண்யம் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கடந்த ஒரு மாதமாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில் ஏராளமான காவலர்கள் வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply