இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்த முதல்வர்

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.இந்தியாவில் 7000 கோடி மதிப்பீட்டிலும் தமிழகத்தில் 2000 கோடி மதிப்பீட்டிலும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்க கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் கார்களினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்பாடாக எலெக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி தற்போது இந்தியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. கோனா காரின் ஆன் ரோடு விலை ரூ. 30 லட்சம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். 100 கி.மீ வேகத்தை 9.7 வினாடிகளில் எட்டும்.

இதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் எலெக்ட்ரிக் கார்கள் இயங்கி வந்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த காரில் டிரைவருடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் அந்த காரில் பயணம் செய்தார்.


Leave a Reply