சென்னையில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இளைஞரை கிண்டல் செய்ததால் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரவை சேர்ந்த 20 வயது இளைஞர் அவினாஷ் பட்டேல் அடையாரில் உள்ள தனியார் அழகு நிலையம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி நீலாங்கரை கடற்கரையில் சடலமாக மீட்க்கப்பட்ட அவினாஷ் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் சிலர் அவருடைய நடை, நடவடிக்கைகளை கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தனக்கு இயற்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்து இருப்பதை கூட புரிந்து கொள்ளாமல் பலரும் தன்னை அவமதித்ததாகவும், இந்தியா போன்ற நாடுகள் தன்னை போன்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ முடியாது என நீண்ட பதிவை எழுதியுள்ளார். தற்கொலைக்கு பிறகு அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்காத நிலையில் அவரது முகநூல் பதிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.