மும்பையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி மீட்கப்பட்டது. கனமழையை அடுத்து நேற்று முன் தினம் அதிகாலை மலாட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன் தரமின்றி கட்டப்பட்ட 20 அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அருகே இருந்த குடிசை வீடுகளின் மீதும் விழுந்தது.
அப்போது அங்கு ஆயுக் ஷர்மா என்ற குழந்தை வீட்டில் தாய் தந்தையுடன் உறங்கி கொண்டு இருந்துள்ளது. அந்த சுவர் இடிந்து விழுந்ததில் கூரை வீழ்ந்தது. திடீரென பெருக்கெடுத்து வந்த நீர் வீட்டினுள் இருந்தவர்களை இழுத்து சென்றது. கணவனும், மனைவியும் தன் குழந்தையுடன் கை கோர்த்தபடியே இழுத்து செல்லப்பட்டனர். இருந்தாலும் நீரின் வேகத்தில் அவர்கள் பிரிய நேர்ந்தது. இந்த விபத்தில் குழந்தையின் தாத்தாவும், அத்தையும் உட்பட 26 பேர் உயிரிழந்து விட்டனர்.
தாயும், தந்தையும் நீண்ட நேரத்திற்கு பிறகு காயங்களுடன் ஒருவருக்கு ஒருவர் கண்டு கொண்டனர். குழந்தையை காண வில்லை என காயங்களுடன் தாயும், தந்தையும் தேடி திரிந்து உள்ளனர். இறுதியில் அரை கிலோமீட்டர் தொலைவில் அடித்து செல்லபட்டிருந்த வீட்டின் கூரையோடு குழந்தை இருந்தது. அந்த குழந்தை காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது. குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை எண்ணி பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.